» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

வெள்ளி 1, மே 2026 11:51:27 AM (IST)



உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.

திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று (சித்திரை பவுர்ணமி), தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் இருந்து அதிகாலை 2:30 மணியளவில் கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்ட அவர், அங்கிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆறு நோக்கிப் புறப்பட்டார்.

அதிகாலை 5:40 மணியளவில் ஆழ்வார்புரம் பகுதிக்கு வந்தடைந்த கள்ளழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்திருந்த வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, அதிகாலை 5:48 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.

அப்போது, ஆற்றில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேர்த்திக்கடனாகப் பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏற்றியும், தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி பீய்ச்சி அடித்தும் கள்ளழகரை வரவேற்றனர்.
முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு

இந்த விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வைகை ஆற்றில் இருந்து காலை 7:35 மணிக்குக் கிளம்பிய கள்ளழகர், ராமராயர் மண்டகப்படிக்குப் புறப்பட்டார். இன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கும் அவர், விழாவின் அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்:

மே 2: தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளித்தல் மற்றும் இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி.

மே 4: அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர் மலைக்குத் திரும்புதல்.

மே 6: உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கியதைத் தொடர்ந்து மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory