» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!

செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

நாகர்கோவில் ஒழுகினசேரியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்காக, நாளை (ஜூன் 17) முதல் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒழுகினசேரி சந்திப்பில் பயன்பாடற்ற நிலையில் உள்ள பழைய ரயில்வே கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாக உள்ளதால், பாதுகாப்பான பணிகளுக்காகச் சுமார் 15 நாட்களுக்குப் போக்குவரத்தை முழுமையாக மாற்றித் தரும்படி ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடுவது குறித்து நேற்று மாலை எஸ்பி ஸ்டாலின் நேரில் சென்று விரிவான கள ஆய்வு நடத்தினார். ஆய்வின் முடிவில், ஒழுகினசேரி பகுதியில் தற்காலிகமாகப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது:

ஒருவழிப் பாதையாக மாற்றம்: தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய மேம்பாலமானது தற்காலிகமாக ஒருவழிப் பாதையாக (One-way) மாற்றப்படுகிறது. இதன் மூலம், வடசேரியிலிருந்து அப்டா மார்க்கெட் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டும் வழக்கம்போல ஒழுகினசேரி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும்.

நெல்லை மார்க்க வாகனங்கள்: நெல்லை மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாகப் புத்தேரி சென்று, அங்கிருந்து அசம்பு சாலை வழியாக வடசேரியைச் சென்றடைய வேண்டும்.

15 நாட்களில் பணிகள் முடியும்:

இந்தக் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் நாளை (17-ஆம் தேதி) முதல் அதிகாலை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளபடி, திட்டமிட்டபடி 15 நாட்களுக்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடித்துத் தரப்படும்.

மாநகரின் நீண்ட காலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எஸ்பி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory