» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கன்னடத்தின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது : கமலுக்கு கர்நாடகா முதல்வர் கண்டனம்!

புதன் 28, மே 2025 4:21:16 PM (IST)



தமிழ் மொழியில் இருந்து கன்னடம் தோன்றியதாக பேசிய கமல்ஹாசனை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல் - மணிரத்னம் - சிம்பு - ஏ.ஆர் ரஹ்மான் காம்போவில் உருவான தக் லைஃப் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. ஆனால் அந்த கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாதளவுக்கு கமல் பிரச்னையில் சிக்கியுள்ளார்.

தக் லைஃப் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பாராட்டி பேசிய கமல்ஹாசன், "உங்கள் பாஷை தமிழில் இருந்து வந்தது." என்று கூறியிருந்தார். தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரின் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.

இதற்கு அரசியல் கட்சிகளும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. சிறுமையான கமல்ஹாசனுக்கு அது தெரியாது." என்று விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிரும், புதிருமாக உள்ள காங்கிரஸ், பாஜக ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.

கமல்ஹாசனுக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில், "கமல்ஹாசனின் அனைத்துப் படங்களையும் கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இல்லையென்றால் அவர் மன நோயாளி போல் இப்படி நடித்துக் கொண்டே இருப்பார்." என்று கூறியுள்ளார்.

கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா, "கலைத்துறையில் உள்ள நடிகர்கள் அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். கமல் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டே கன்னட மொழிக்கும், கன்னடர்களுக்கும் அவமதிப்பு ஏற்படுத்தியுள்ளார்." என்று கூறியுள்ளார்.

கன்னட ஆதரவு அமைப்பினர் பலரும், "கமலின் கருத்து தேவையில்லாத ஒன்று. அவர் உடனடியாக இதுகுறித்து விளக்கமளித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும்." என்று எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory