» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
திங்கள் 22, ஜூலை 2024 8:20:00 AM (IST)
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு நீடித்ததால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் அருவிக்கரையை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குற்றாலத்தில் நேற்று சாரல் மழை இல்லை. வெயில் அடித்தது. ஆனாலும் குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. புலியருவியில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் குவிந்தனர். இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால், வரிசையாக நின்று அருவிகளில் குளித்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்படி அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.