» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்து: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
செவ்வாய் 17, செப்டம்பர் 2024 12:33:06 PM (IST)
நெல்லையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (40), என்ஜினீயர். பாளையங்கோட்டையில் உள்ள தகவல் தொடர்புத்துறை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள்கள் மாரீஸ்வரி (12). சமீரா (7). மாரீஸ்வரி கங்கைகொண்டான் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், சமீரா அருகில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வந்தார்கள்.
கண்ணன் தற்போது மனைவி செல்வியின் சொந்த ஊரான கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கண்ணனின் மாமியாரான ராஜபதி தெற்கு தெருவை சேர்ந்த கந்தனின் மனைவி ஆண்டாள் (60) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட புறப்பட்டார். அப்போது பேத்திகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால், அவர்களையும் அழைத்துச்செல்ல முடிவு செய்தார்.
அப்போது கண்ணன் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் குழந்தைகள் மற்றும் மாமியார் ஆண்டாள் ஆகியோர் நெல்லையில் வந்து இறங்கி, பஸ்சில் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். கண்ணனுடன் மோட்டார் சைக்கிளில், குழந்தைகள் மாரீஸ்வரி, சமீரா மற்றும் ஆண்டாள் ஆகியோர் புறப்பட்டனர். நெல்லை தச்சநல்லூர் ரவுண்டானாவை கடந்து வடக்கு புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சேரன்மாதேவியில் இருந்து சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள ஆயில் நிறுவனத்துக்கு சென்று டீசல் நிரப்புவதற்காக ஒரு டேங்கர் லாரி வந்தது. இந்த லாரி ரெயில்வே பாலத்தில் ஏறி மறுபுறம் இறங்கி வந்து கொண்டிருந்தது. ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள உலகம்மன் கோவில் எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் கண்ணன், ஆண்டாள், சிறுமிகள் மாரீஸ்வரி, சமீரா ஆகிய 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரியை ஓட்டி வந்த பத்தமடை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் லாரி மோதி பலியான சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.