» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி கோவிலில் மகா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:29:25 AM (IST)



19 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசியில் அமைந்துள்ள காசி விசுவநாத சுவாமி கோவில் பழம் பெருமைமிக்கது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் பராக்கிரம பாண்டியனால் இந்த கோவில் கட்டப்பட்டது. மன்னன் தனது ஆட்சி குறிப்பேட்டில் ‘இறைவனுக்கு எழுப்பிய இந்த ஆலயம் காலத்தால் சிதைவடையுமானால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பம் செய்பவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

17-ம் நூற்றாண்டு இறுதி மற்றும் 18-ம் நூற்றாண்டு தொடக்கத்திற்கு இடைபட்ட காலத்தில் இந்த கோவிலின் கோபுரம் தீயினால் சிதைவடைந்தது. அது மொட்டை கோபுரமாகவே காட்சியளித்தது. அதன் பின்னர் அந்த மொட்டை கோபுரம் அகற்றப்பட்டு கோபுரம் இல்லாமல் வாசல் மட்டும் கோவிலில் இருந்தது. பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது இந்த கோவிலில் புதிய கோபுரம் கட்டி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

இந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு காசி விசுவநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இந்த கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகமான நேற்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 5 மணிக்கு விநாயகர், முருகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 6.45 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை நடத்தப்பட்டது.

காலை 7.15 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க பட்டு வண்ண குடை பிடித்து கடம் அதாவது புனிதநீர் குடம் ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 9.15 மணிக்கு கோவில் ராஜகோபுரம், விமான கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி... காசிவிசுவநாதரே போற்றி’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். விண்ணதிர ஒலித்த இந்த கோஷம் கோவில் முழுவதும் எதிரொலித்தது. பக்தர்கள் மீது புனித நீரும் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காசிவிசுவநாதர், உலகம்மன், பாலமுருகன் சன்னதி மூலஸ்தானத்திலும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேதசிவாகம் வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினார்கள்.

கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல் கிேஷார், நீதிபதிகள் ராஜவேல், கதிரவன், சிவாஜி செல்லையா, ராணி ஸ்ரீகுமார் எம்.பி., அமைச்சர் சேகர்பாபு மனைவி சாந்தி, எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, அறங்காவலர்குழு தலைவர் பாலகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் பொன்னி, உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், இனிப்பு வழங்கப்பட்டன.

இரவில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் செண்டை மேளம் முழங்க சுவாமி-அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வருதல் நடந்தது. ரதவீதிகளில் பக்தர்கள் திரளாக நின்று தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி, மாவட்ட எஸ்பி அரவிந்தன் மேற்பார்வையில் டிஎஸ்பி தமிழ்இனியன், இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory