» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை., அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலி : மகன் படுகாயம்

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:21:10 PM (IST)

பாளையங்கோட்டை அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் பாதாளமுத்து (45). லாரி டிரைவர். இவருடைய மனைவி கோதை நாச்சியார் (43). இவர்களுடைய மகன் சுரேஷ் (16), அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பங்குனி உத்திர விழாவையொட்டி பாதாளமுத்து மோட்டார் சைக்கிளில் மனைவி, மகனுடன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அவர்கள் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நெல்லை வழியாக ஆறாம்பண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, எதிரே திருச்செந்தூர் பகுதியில் இருந்து செங்கோட்டை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக பாதாளமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாதாளமுத்து, கோதை நாச்சியார், சுரேஷ் ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோதை நாச்சியார் பரிதாபமாக இறந்தார். பாதாளமுத்து, சுரேஷ் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பாதாளமுத்து நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். 

சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை அருகே கோவிலுக்கு சென்று திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory