» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூவாகத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டி: நெல்லை ரேணுகா முதலிடம்!
செவ்வாய் 13, மே 2025 11:32:20 AM (IST)

கூவாகத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகி போட்டியில் நெல்லையை சேர்ந்த ரேணுகா முதலிடம் பிடித்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவாண் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் திருநங்கைகள், தங்களை புதுமணப்பெண் போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வருகை தருவர். பின்னர் அரவாண் சாமியை கணவராக பாவித்து கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள்.
இவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று முன்தினம் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா மற்றும் மிஸ் திருநங்கை-2025 அழகி போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது. ஸ் கூவாகம்-2025 அழகி போட்டிக்கான முதல் சுற்று நடந்தது.
இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, தூத்துக்குடி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 திருநங்கைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 25 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும், மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். அவர்களில் 15 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 7 பேரிடமும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் சிறந்த முறையில் பதில் அளித்த நெல்லையை சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அஞ்சனா 2-ம் இடத்தையும், கோவை ஆஷ்மிகா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் முத்தமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி!
வெள்ளி 16, மே 2025 3:32:32 PM (IST)

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 16, மே 2025 12:40:51 PM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: மே 22-ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 16, மே 2025 8:23:31 AM (IST)

பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து தினமும் கண்காணிக்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு
வியாழன் 15, மே 2025 5:47:20 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 8 வட்டங்களில் ஜமாபந்தி: அம்பாசமுத்திரத்தில் ஆட்சியர் பங்கேற்பு
வியாழன் 15, மே 2025 5:04:54 PM (IST)
