» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து தினமும் கண்காணிக்க வேண்டும் : ஆட்சியர் உத்தரவு

வியாழன் 15, மே 2025 5:47:20 PM (IST)



திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இன்று பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு மற்றும் வருடாந்திர சிறப்பு கூட்டாய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வில், திருநெல்வேலி பகுதிகளில் 206 வாகனங்களும், வள்ளியூர் பகுதிகளில் 224 வாகனங்களும், அம்பாசமுத்திரம் பகுதியில் 148 வாகனங்களும் ஆய்வுக்கு உட்பட்டுத்தப்பட்டு, அவசர காலவழி, கண்காணிப்பு கேமராக்கள், இருக்கைகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் குழந்தைகள் பள்ளி வாகனங்களில் ஏற, இறங்கக்கூடிய படிக்கட்டுகள் ஆகியவற்றின் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அகர்வால் கண் மருத்துவமனையின் மூலம் கண்பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், வட்டாரப் போக்குவரத்து விதிகளுக்குட்பட்டு பள்ளி வாகனங்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நடத்தை விதிகளை கடைப்பிடிக்கவும், தீயணைப்பு துறையின் மூலம் அவசர காலங்களில் தீயணைப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் மூலம் அவசர காலங்களில் மருத்துவ உதவிகள் வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்து செயல்முறை விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

வாகன பரிசோதனையில் வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டால் அக்குறைகள் ஓரிரு நாட்களில் முழுமையாக சரிசெய்யப்பட்டு, மீண்டும் வாகன பரிசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்படும். பள்ளி வாகனங்களை எப்போதும் நல்ல முறையில் பராமரித்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வாகனத்திலுள்ள தீயணைப்பு கருவிகளை தினமும் ஓட்டுனர்கள் பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா என்பதனையும் தினமும் ஓட்டுனர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் கண்காணித்து வரவேண்டும் என்றார்..

ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்.ஆர்.சரவணன், போக்குவரத்து காவல் தலைமையிட உதவி ஆணையர் எம்.ஜி.அசோக்குமார், ஆதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் பிரபாகரன் (திருநெல்வேலி), ராஜசேகர் (அம்பாசமுத்திரம்), 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory