» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முகமூடி கொள்ளையனை துப்பாக்கி முனையில் கைது செய்த போலீசார்: எஸ்பி பாராட்டு!

திங்கள் 26, மே 2025 10:35:31 AM (IST)



தூத்துக்குடி, குமரி உட்பட 5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்ட பிரபல முகமூடி கொள்ளையனை கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். 

கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை உதவி ஆய்வாளர்  செந்தில்குமார், ஏட்டு செல்லத்துரை மற்றும் காவலர் சுரேஷ் ஆகியோர் பெத்தேல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த நபரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர், பைக்கை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றார். இதைத்தொடர்ந்து அவரை, போலீசார் வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கினர்.இதையடுத்து அந்த நபர், பைக்கை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். 

ஆனாலும் போலீசார் அவரை விடாமல் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை, மேற்கு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழகாடுவெட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த நடராஜன் மகன் சந்திரகுமார் (33) என்பதும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல முகமூடி கொள்ளையன் என்பதும் தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவில்பட்டியில் துப்பாக்கி முனையில் பிடிபட்ட சந்திரகுமார் மீது கோவில்பட்டி, எட்டயபுரம், எப்போதும்வென்றான், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, சங்கரன்கோவில், ஆலங்குளம், தக்கலை, சிவந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வீடு,  கடைகளை உடைத்து கொள்ளையடித்தல், பைக்குகள் திருட்டு என பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார், சந்திரகுமாரை தேடி வந்தனர். 

இதையடுத்து சந்திரகுமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 3 டூவிலர்கள், அரிவாள், கடப்பாறை, ஸ்குருடிரைவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 17 வழக்குகளில் போலீசார் சந்திரகுமாரை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவில்பட்டியில் வாகன சோதனையின் போது பைக்கில் தப்பிச் சென்ற பிரபல முகமுடி கொள்ளையன் சந்திரகுமாரை டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். துரிதகதியில் செயல்பட்டு கொள்ளைனை மடக்கி பிடித்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெகுவாக பாராட்டினார்.


மக்கள் கருத்து

மக்கள்மே 26, 2025 - 05:55:08 PM | Posted IP 162.1*****

பிடித்து சுட வேண்டியது தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory