» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பையில் ரூ.12.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: சபாநாயகர், அமைச்சர் வழங்கல்!

வெள்ளி 30, மே 2025 5:03:58 PM (IST)



அம்பாசமுத்திரத்தில் ரூ.12.68 கோடி மதிப்பில் 6,754 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று (30.05.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் ரூ.12.68 கோடி மதிப்பில் 6,754 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொடங்குவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- மகளிர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் மனுக்கள் பெறப்பட்டு, அவர்களது மனுக்கள் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் 48 மணி நேரம் திட்டத்தின் மூலம் விபத்து ஏற்படும் பட்சத்தில் அரசே ரூ.2 இலட்சம் செலவு செய்து உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 976 மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதி, மதங்களை கடந்து அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு வழங்கினார்கள்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களுக்காக சாலை அமைத்தல், வீடு கட்டுதல், குடிநீர் தேவைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் வருவாய்த்துறை செயலாளர்களிடம் தமிழ்நாட்டில் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டதன் அடிப்படையில், நகர்புறங்களில் நீண்ட நாட்கள் குடியிருப்பவர்களுக்கும், இரண்டு சென்ட் பட்டா வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூபாய் 5.00 லட்சத்திற்கும் குறைவான மதிப்பு உள்ள நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று பட்டா வழங்கலாம். 

ரூபாய் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனைகளுக்கு சென்னையில் உள்ள வருவாய்த்துறை செயலாளரிடம் அனுமதி பெற்று பட்டா வழங்கப்படும். மேலும், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை, மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக பட்டா வழங்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதோடு, ஏற்கனவே பெறப்பட்ட பட்டாக்களுக்கு இ-பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்களுக்கு பட்டாவும் வழங்கி அதில் வீடும் கட்டிக் கொடுக்கும் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சியில் நடந்த அரசு விழாவில் 54,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்த விழாவில் 6,308 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்க ஊர்க்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க பட்டாக்களும், அதேபோல காரையாறு பகுதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனார்குளம் பகுதியில் வீட்டுமனை பட்டாக்கள் இன்று வழங்கப்படுகிறது.

மேலும், அம்பாசமுத்திரம் பகுதியில் ஊராட்சி பேரூராட்சி, நகராட்சி அதிக அளவில் இருப்பதால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பாபநாசம் மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு தனல் அமைக்கும் திட்டம் உள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதி பெற்று பணிகள் தொடங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, சேரன்மகாதேவி கோட்டாட்சியர் (பொ) சிவகாமசுந்தரி, அம்பாசமுத்திரம் நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பரணிசேகர், அம்பாசமுத்திரம் நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் எஸ்.ஞானகனி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வைகுண்டம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory