» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.02 கோடி வங்கி கடன்: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்

புதன் 11, ஜூன் 2025 4:03:27 PM (IST)



திருநெல்வேலியில் 504 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.02 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு இன்று (11.06.2025) சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் மணிமேகலை விருதுகள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 504 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.02 கோடி மதிப்பிலான வங்கிகடன் இணைப்புகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் வழங்கி மகளிர் சுய உதவிகுழுக்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து நான்காண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு வங்கி கடன் இணைப்புகளை வழங்கி வருகிறார்கள். மகளிர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு பல்வேறு வங்கி கடன் இணைப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளார்கள். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களாக ஆண்களுக்கு சமமாக பெண்களும் உயர்ந்து நிற்க வேண்டும் என்று உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அனைத்து மகளிர்களும், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பாராட்டி வருகிறார்கள்.
 
தமிழ்நாடு துணை முதலமைச்சர் மகளிர்சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு இன்று மகளிர்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள். அதன்படி இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் 504 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.02 கோடி மதிப்பிலான வங்கிகடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள், 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளில், 204 ஊராட்சிகளில் மொத்தம் 10,500 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டிற்கு (2025-26) திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.764.00 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு நாளது தேதி வரை 917 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.93.11 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் வங்கி கடன் இணைப்பிற்கு தகுதியுள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வட்டார அளவில் தரமதிப்பீடு முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மகளிரை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று சுய சார்புடன் தமது சொந்தகாலில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களை ஆற்றல் படுத்திடவும் அதிகாரப்படுத்திடவும், மகளிர் வாழ்வில் உள்ள வறுமை என்னும் இருளை நீக்கி வளம் என்னும் ஒளியை பரவ செய்வதற்காக மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.

ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மேலும், 2024-25ம் ஆண்டிற்கு மாநில அளவிலான மணிமேகலை விருதிற்கு சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரிவில் நமது மாவட்டத்தில் இருந்து இராதாபுரம் வட்டாரம் இராதாபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் இன்று விருது மற்றும் பரிசுத்தொகையாக ரூ.3.00 இலட்சம் ஊக்கதொகையும் மற்றும் சிறந்த சுயஉதவிக்குழு பிரிவில் வள்ளியூர் வட்டாரம் பழவூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆப்பிள் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு விருது மற்றும் பரிசுத் தொகையாக ரூ.1.00 இலட்சம் ஊக்கதொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஊரகம் மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் உள்ள 36,378 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2140.01 கோடி வங்கி இணைப்பு கடன் வழங்கப்பட்டு மகளிர்களின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்று மாநில அளவில் மணிமேகலை விருதிற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிகுழுவை தேர்தெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விருது வழங்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழு சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், மாவட்ட தொழில் மைய மேலாளர் முருகன், தாட்கோ மேலாளர் சுதா, களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory