» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி உருவாக வேண்டும் : ஆட்சியர் பேச்சு

வியாழன் 19, ஜூன் 2025 3:37:30 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம், கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உயர்கல்வியில் சேர வழிகாட்டுதல் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பேசினார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 14,847 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இத்தேர்வில் 13,285 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். உயர்கல்வியில் சேர்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 9500324417, 9500524417 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டு, திறமையான ஆசிரியர்கள் மூலம் உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 1035 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேராமல் இருந்தது கண்டறியப்பட்டு, அவர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை, பொறியியல் துறை, தொழில்நுட்ப கல்வியியல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, முன்னோடி வங்கிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேலும், தாய், தந்தையர்களை இழந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு பொருளாதார ரீதியிலும், பிற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை அலுவலர்களுக்கு உயர்கல்வி சேர்வதற்கான அனைத்து நடவடிக்கையினையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி, தெரிவிக்கையில்:-

திருநெல்வேலி மாவட்டத்தில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அனைத்து மாணவ, மாணவியர்களும் கல்வி கற்று சிறந்த பணியில் சேர்ந்து தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், திட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நம் மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் பயின்று உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவியர்களை பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் கண்டறியப்பட்டு, உயர்கல்வியில் சேராமல் இருப்பதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதற்கான உதவிகளை வழங்கி, அவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 சதவீதம் மாணவர்களும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் வழிகாட்டுதல் முகாம் மாலை வரை நடைபெறும். மேலும், ஆலோசனை தேவைப்படுவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம்.

மாணவ, மாணவியர்கள் இடைநிற்றல் இருந்தால் அப்பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் இருப்பிடத்தை சுற்றி இருப்பவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக இருப்பதற்கு அனைத்துத்தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory