» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் பயன்பெறுமாறு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.06.2025) வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தில் 101.15 மி.மீ மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வளமையான மழையளவான 38 மி.மீ-ஐ விட 166 சதவிகிதம் அதிகமாகும். மேலும், நடப்பு 2025 ஆண்டு ஜூன் மாதத்தில் 19.06.2025-ம் தேதி வரை 18.05மி.மீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் 4938.68 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 09.02.2025 முதல் விவசாயிகளின் நில உடைமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனிக்குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 49481 பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகளை இத்திட்டத்தில் சேர்த்திட அரசால் அறிவுறுத்தப்பட்டு, 16.06.2025 வரை சுமார் 27164 பி.எம்.கிசான் மற்றும் 12236 இதர விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் 20-வது மற்றும் அடுத்தடுத்த தவணைகளைப் பெற தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற 22.04.2025 மற்றும் 02.05.2025 அன்று பெய்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மானூர், சேரன்மகாதேவி மற்றும் நாங்குநேரி ஆகிய வட்டாரங்களில் சேதமடைந்த 1.315 ஹெக்டர் வாழைப் பயிர் சேத விவரம் வருவாய் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 2024-2025 பிசான பருவத்தில் விளைந்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடவும், இடைத்தரகர்கள் மூலம் பாதிக்கப்படாமல் இருக்கவும் மொத்தம் 62 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து 66146.68 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7324 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண்/வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்கு இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட 677 நீர் நிலைகள் விவரம் திருநெல்வேலி மாவட்ட அரசிதழ் எண்.3, நாள்.28.04.2025-ன் படி வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பயிர் நிலங்களின் மண்ணை வளப்படுத்திட, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நடப்பு நிதியாண்டு 2025-26 -ல் 17.06.2025 வரை பயிர் கடனாக உழவர் கடன் அட்டை மூலம் 3782 விவசாயிகளுக்கு ரூ.131.4002 கோடி வழங்கப்பட்டுள்ளது மற்றும் கால்நடை வளர்க்கும் 649 விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை மூலம் ரூ.536.88 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கடன் உதவி கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
நெல் சாகுபடிக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கார் பருவத்தில் டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இயந்திர நடவுக்கு மானியம், நெல் விதை, நுண்ணூட்ட உரம், உயிர் உரங்கள் விநியோகம் மற்றும் நெல் விதை உற்பத்தி ஆகிய இனங்களின் கீழ் மானியம் வழங்குவதற்கு ஏதுவாக பயனாளிகள் தேர்வு பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் இயற்கை வேளாண்மை என்பது இரசாயனம் இல்லாமல் தூய விதைகள் மூலம் ஆரோக்கியமான வேளாண் விளைபொருட்களை விளைவிக்ககூடிய நிலையான வேளாண்மை முறையாகும். மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல், காலநிலை மீள்தன்மை, விவசாயின் உள்ளீட்டுச் செலவை குறைத்தல், பாதுகாப்பான உணவுக்கான அறிவியல் பூர்வமாக ஆதரிக்கப்பட்ட அணுகுமுறைகளுடன் விவசாய நடைமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் (National Mission on Natural Farming) என்ற திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது.
இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில், மானூர் வட்டாரத்தில் விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கர் பரப்பு வீதம் 125 விவசாயிகளை இணைத்து ஒரு தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக வேளாண் அறிவியல் மையம் மூலம் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு முதன்மை பயிற்சியாளராக உருவாக்கப்படுகிறார்கள். இம்முதன்மை பயிற்சியாளர்கள் தொகுப்பில் உள்ள பிற விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்து மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கவும், வழிவகை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் 2500 ஏக்கருக்கு தேவையான பசுந்தாள் உர விதைகள், 400 மண்புழு உரப்படுக்கைகள், 3 உயிர்ம வேளாண்மை உற்பத்தி மையம், 12 உயிர்ம வேளாண்மை செயல் விளக்கத் திடல்கள், மற்றும் 20,000 வேப்பமரக்கன்றுகள் ஆகியவை மானிய விலையில் வழங்குவதற்கு இலக்குகள் பெறப்பட்டுள்ளன. எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 34 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட எக்டருக்கு ரூ.9600/- மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், வரப்புப்பயிராக உளுந்து விதைகள், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல் விளக்கத் திடல் மற்றும் விசைத் தெளிப்பான்கள் மானிய விலையில் வழங்கிட இலக்குகள் பெறப்பட்டுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 34,434 பயனாளிகள் பதிவு செய்து பயன் பெற தகுதியுடையவராக உள்ளனர். இவற்றில் 31317 பயனாளிகள் பிரதம மந்திரியின் கௌரவ உதவித் தொகை பெற்று வருகின்றனர். இவற்றில் e-KYC பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 934 பயனாளிகளுக்கு e-KYC செய்து கொடுத்திடவும், வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைப்பு செய்யப்படாமல் உள்ள 1270 பயனாளிகளை கண்டறிந்து வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடும் பணியும் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களால் இம்மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மே 2025-ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 138 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றுள் வேளாண்மை சார்ந்த மனுக்கள் 90 எண்களும், வேளாண்மை சாராத மனுக்கள் 48 எண்களும் பெறப்பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் சம்மந்தப்பட்ட துறை மூலம் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, தனியார் உரம் சில்லறை விற்பனையாளர்களின் உர விற்பனைகளை கண்டறிவதற்கும், இருப்பு மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் குறித்தும் எளிதில் அறிந்து கொள்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரங்களில் விபரங்களை கணினி வாயிலாக கண்டறிவதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட விற்பனை முனைய கருவிகள் மூலம் சில்லறை உர விற்பனையை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான விற்பனை முனைய கருவிகள் 5 வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
மேலும், வேளாண்மைத்துறை சார்பில் குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.400 மானிய விலையில் நெல் விதைகளும், பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.650 மானிய விலையில் திரவ உயிர் உரம் 1 லிட்டர் ஒரு பயனாளிக்கும், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவேடுகளை கணினிமயமாக்கும் பொருட்டு 20 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கணினி பெறுவதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில், சமூக வன கோட்ட அலுவலர் இளங்கோ, இணை இயக்குநர் (வேளாண்மை) வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)

இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி உருவாக வேண்டும் : ஆட்சியர் பேச்சு
வியாழன் 19, ஜூன் 2025 3:37:30 PM (IST)
