» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!

வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)

நெல்லை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி செய்த பெண்ணை டெல்லிக்கு சென்று போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). இவருடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, அவரை நம்ப வைத்து அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 87 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு கும்பல் மோசடி செய்தது.

இதுகுறித்து மாயாண்டி அளித்த புகாரின்பேரில், நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்த நிலையில், அவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரெஜின் என்பவர் பல்வேறு மாநிலங்களுக்கும் மாறி மாறி சென்று பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு மும்பையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்றவர்களையும் கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய உமா என்பவர் புதுடெல்லியில் தலைமறைவாக இருப்பது தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்பி சூப்பிரண்டு உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு முத்துராமலிங்கம், பெண் போலீசார் பரமேஸ்வரி, பகவதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் டெல்லி சென்று, அங்கு பதுங்கியிருந்த உமாவை (40) மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லைக்கு அழைத்து வந்தனர். கைதான உமாவை நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர்.

மேலும், இந்த கும்பலை சேர்ந்த சிலரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் வெளிநாட்டு வேலை, அரசு மற்றும் தனியார் வேலைகளை இடைத்தரகர்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு பணத்தை இழந்து ஏமாற வேண்டாம். இத்தகைய மோசடி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory