» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 7:52:15 AM (IST)
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பளங்களை அழித்துக் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் சிறு அளவு உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தத் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், முத்தையாபுரம், கோவளம், முள்ளக்காடு மற்றும் புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் நிலத்தைக் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலங்கள் வெளிநாட்டுத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அரசுத் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முள்ளக்காடு பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா, பகுதி-2 கிராம நிர்வாக அலுவலர் திருவரங்கச்செல்வி மற்றும் தென் கொரியக் கப்பல் கட்டும் நிறுவன அதிகாரிகள் எனச் சுமார் 10-க்கும் மேற்பட்டோர், தனியார் சர்வே நிறுவன ஊழியர்களுடன் நிலத்தை அளவீடு செய்ய முள்ளக்காடு பகுதிக்கு வந்தனர்.
இதையறிந்த உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் திரண்டு வந்து நில அளவீடு செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதற்காக நிலம் எடுக்கப்படுகிறது என்ற விபரத்தை அதிகாரிகள் முறையாகத் தெரிவிக்காததைக் கண்டித்து, முள்ளக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.
"மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உப்பளங்களைக் கையகப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக அரசு உடனடியாக நிலம் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். இல்லையெனில், அடுத்தக்கட்டமாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்" எனப் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)


நூற்றுக்கு நூறு உண்மைMar 12, 2026 - 04:17:08 PM | Posted IP 104.2*****