» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமைச்சர் நிர்மல் குமார் அநாகரிக பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!

சனி 1, ஆகஸ்ட் 2026 8:27:07 PM (IST)

பொறுப்பின் கண்ணியம் மறந்து அநாகரிகமாகப் பேசி வரும் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிதாகப் பொறுப்பிற்கு வந்த தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறையின் அமைச்சர் நிர்மல் குமார், அறத்திற்குப் புறம்பாக தொடர்ந்து அநாகரிகமான முறையில் பேசி வருகிறார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மேற்கொண்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பாதுகாப்புக்கான நடைபயணத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.

அதேபோல், மக்களால் தேர்வு செய்யப்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் பணியாற்றிய என்னைப் பற்றியும், கீதா ஜீவன் பற்றியும் அவதூறாகவும் அநாகரிகமாகவும் உரையாற்றியுள்ளார். தனது சொந்தத் துறையான மின்சாரத் துறையில் ஏராளமான குளறுபடிகள் தினந்தோறும் ஏற்படுகிறது. மின்வெட்டு தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்போது மின்கட்டண கணக்கீட்டில் பெரும் தவறுகள் நடந்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள விவரத்தின்படி சுமார் 3.70 லட்சம் குடும்பங்கள் மின்கட்டண கணக்கீட்டு குளறுபடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். சுமார் 50 முதல் 75 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த குளறுபடியான கணக்கீடு முறையே இதற்குக் காரணமாகும்.

தனது சொந்தத் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வக்கற்ற திறனற்ற அமைச்சர், 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் சேவை செய்து வரும் முன்னாள் அமைச்சர்களை மோசமான முறையில் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனது அநாகரிக பேச்சை அமைச்சர் நிர்மல் குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory