» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்: புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!!

ஞாயிறு 6, ஜூலை 2025 11:11:26 AM (IST)



பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ‘‘நினைவேந்தல் நிகழ்ச்சியாக’’ திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பொத்தூரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது மனைவி பொற்கொடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பொற்கொடி தலைமையில் காலை 9 மணிக்கு பொத்தூர் பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இருந்து நினைவிடம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நினைவிடத்தில் சுமார் 9 அடி உயரத்தில் நிறுவப்பட்ட ஆம்ஸ்ட்ராங் முழு உருவ சிலையை அவரது மனைவி பொற்கொடி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தாயார் கமலா கவாய் ஆகியோர் திறந்துவைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ‘‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’’ என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் கொடியை அறிமுகப்படுத்தினார். நீல நிற கொடியில், தும்பிக்கையில் பேனாவுடன் யானை இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்துக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன், தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory