» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!

வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)



அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும். இதுகுறித்து 10 நாட்களில் இபிஎஸ் முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2024-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வென்றிருக்க முடியும். அ.தி.மு.க.வில் தொய்வு உள்ளது, பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம்.

நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் ஆகியோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறினோம். வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள், நிபந்தனை இல்லாமல் மீண்டும் வர தயார் என கூறுகிறார்கள்.

எந்த பொறுப்பும் தேவையில்லை என கூறுபவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும். பிரிந்த தலைவர்களை இணைக்கவில்லை என்றால் நாங்கள் அந்தப் பணிகளை மேற்கொள்வோம். யார், யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்து கொள்ளலாம்.

என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன், இது நடக்கவில்லை என்றால் நாங்கள் முயற்சி செய்வோம். 10 நாட்களில் முயற்சி எடுக்கவில்லை என்றால், இதே மனநிலையில் உள்ளவர்களை திரட்டி முயற்சி மேற்கொள்வோம். அ.தி.மு.க.வுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

எங்களுடைய கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது ஆசை. ஜெயலலிதா கூறியது போல் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பதற்கான பணியை தொடங்கியுள்ளோம். நிறைவேற்றவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.

உங்களை மீண்டும் அமைச்சர் ஆக்கியது எடப்பாடி பழனிசாமி தானே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், தன்னைப் போல் 2009-ல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார். பிரிந்து சென்ற தலைவர்களை சந்தித்து பேசி விட்டீர்களா? என்ற கேள்விக்கு அது சஸ்பெண்ஸ் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory