» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய ஹால்ட் ரயில் நிலையங்களை அமைக்க வேண்டும் என்றும், முன்னதாக மூடப்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் (KKDRUA) தென்னக ரயில்வேக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ரயில் வழித்தடங்கள் தென்னக ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்றன. கடந்த 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1956-57 இல் இதற்கான தொடக்கநிலை ஆய்வுகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, 1979 இல் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி பாதையும், 1981 இல் திருநெல்வேலி - நாகர்கோவில் பாதையும் திறக்கப்பட்டன.
தொடக்கத்தில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் (87 கி.மீ) தடத்தில் 16 நிலையங்களும், நாகர்கோவில் - திருநெல்வேலி (74 கி.மீ) தடத்தில் 9 நிலையங்களும் இருந்தன. ஆனால், காலப்போக்கில் வருவாய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அகஸ்தீஸ்வரம், தாமரைகுளம், சுசீந்தரம், தளபதிசமுத்திரம், பானங்குளம் ஆகிய 5 முக்கிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் தற்போது மாவட்டத்தில் வெறும் 10 ரயில் நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் 2 முதல் 5 கி.மீ தூரத்திற்குள் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட குமரி மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் 3 முக்கிய இடங்களில் புதிய ஹால்ட் நிலையங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:
தெங்கன்குழி ஹால்ட் நிலையம்: இரணியல் - பள்ளியாடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 8.5 கி.மீ தூரத்தின் மையப்பகுதியில் (திக்கணங்கோடு ஊராட்சி) இந்நிலையம் அமைய வேண்டும். இதற்குத் தேவையான நிலம் ரயில்வே வசமே உள்ளதால் நில ஆர்ஜிதம் தேவையில்லை.
பார்வதிபுரம் ஹால்ட் நிலையம்: நாகர்கோவில் மாநகராட்சியின் நுழைவாயிலான பார்வதிபுரத்தில் (நாகர்கோவில் டவுண் - ஆளூர் இடையே) நிலையம் அமைத்தால், திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி செல்லும் நகர்ப்புற பயணிகளுக்குப் பேருந்து இணைப்புடன் கூடிய சிறந்த பயணச் சேவையாக அமையும்.
சாமிதோப்பு ஹால்ட் நிலையம்: கன்னியாகுமரி - நாகர்கோவில் இடையே மூடப்பட்ட நிலையங்களால் அகஸ்தீஸ்வரம் தாலுகா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான சாமிதோப்பில் புதிய நிலையம் அமைப்பது தினசரிப் பயணிகளுக்கும், ஆன்மீகச் சுற்றுலா வரும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் 1989 ஆம் ஆண்டு முதலே நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய இந்த நியாயமான கோரிக்கைகளைத் தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனப் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் கைபேசி தடை உத்தரவு மேலும் தீவிரம்; மீறினால் பறிமுதல்!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:28:30 PM (IST)

அதிமுகவில் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறேன்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:19:59 PM (IST)

ஆராய்ச்சிப் பணிக்காக ரேடியோ காலர் பொருத்தப்பட்ட கழுகு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:55:29 PM (IST)

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள மரங்கள் சேதம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:34:45 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
செவ்வாய் 30, ஜூன் 2026 12:50:17 PM (IST)


