» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உயர்கல்வியினை ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுரை
செவ்வாய் 20, மே 2025 12:03:14 PM (IST)

மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியினை ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும் என்று கல்லூரி கனவு நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுரை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இன்று (20.05.2025) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் வழிகாட்டி கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, தலைமை உரையாற்றினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சியானது முதல்கட்டமாக சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியிலும், இரண்டாம் கட்டமாக வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்டமாக பாளையங்கோட்டை நகர்பகுதி மற்றும் கிராமப்பகுதி, திருநெல்வேலி நகர்பகுதி ஆகிய கல்வி வட்டங்களுக்கு சாராள் தக்கர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி வழிகாட்டி கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, தலைமை உரையாற்றினார்கள். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தெரிவித்ததாவது : கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும் நம் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயிற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் ‘கல்லூரி கனவு” நிகழ்ச்சியை 25.06.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் தொடங்கி வைத்து, இன்று தமிழ்நாட்டில் மாபெரும் ஒரு சிறப்பு வாய்ந்த திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டு, உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் வழிகாட்டு முறைகள் வழங்கப்படவுள்ளது.
உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கும் பொருட்டும். உங்களுக்கு விரும்பமான துறையை தேர்ந்தெடுக்கவும்.
எந்த துறைகளெல்லாம் தேர்ந்தெடுத்து பயிலலாம் என்ற ஆலோசனைகள் வழங்கவும் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் இக்கல்லூரி கனவு நிகழ்ச்சியின் வாயிலாக, நீங்கள் உயர்கல்வியை தேர்வு செய்வதற்கான படிவங்களை பூர்த்தி செய்வதற்கும், கல்வி கடன் வங்கிகள் மூலம் பெறுவதற்கும் இந்நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும். இக்கல்லூரி கனவு நிகழ்ச்சியின் மூலம், சிறந்த வல்லுனர்களால் உயர்கல்வி, உதவித்தொகை பெறுவது குறித்தும் விழிப்புணர்வு உங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளும் விதமாக பல்வேறு அரசு நிறுவனங்கள், கல்லூரிகள் சார்பில் 18 கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியினை பார்வையிடுவதோடு, வழிகாட்டி கையேட்டினை மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். உயர்கல்வி தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்வது உயர்கல்வியை தேர்வு செய்யும் முன் ஆலோசித்து பொறுமையாக தேர்வு செய்து உயர்கல்வியை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் அடைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, 22.05.2025 அன்று மானூர் வட்டத்தில் கே.எம்.பி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வைத்து கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அப்பகுதியினை சார்ந்த மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் முனைவர்.செண்பக விநாயக மூர்த்தி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் டெய்ஸி மாக்தலின், ஸ்கார்டு செவிலியர் கல்லூரி மஞ்சுளா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை உதவி இயக்குநர் மரிய சகாய ஆன்டனி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைகல்வி) சாய் சுப்புலெட்சுமி, கல்வியாளர்கள், பல்வேறு வழிகாட்டி வல்லுநர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இராதாபுரம் வட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு
புதன் 21, மே 2025 5:44:10 PM (IST)

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
புதன் 21, மே 2025 4:05:17 PM (IST)

அரசு பஸ் கண்டக்டர் கார் ஏற்றி படுகொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3பேர் கைது!
புதன் 21, மே 2025 12:52:59 PM (IST)

அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது...!
செவ்வாய் 20, மே 2025 10:53:26 AM (IST)

விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்: கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி!!
திங்கள் 19, மே 2025 9:24:45 PM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)
