» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்

சனி 26, ஜூலை 2025 10:29:39 AM (IST)



தூத்துக்குடியில் தூய பனிமய மாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

தூத்துக்குடியில் உள்ள திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 443ஆம் ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய‌து. 

இதையொட்டி காலை 7 மணிக்கு கொடியேற்றறத்திற்கான சிறப்பு திருப்பலி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றி வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டனர்.

பின்னர் உலக சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது. ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை கொடி மரத்தின் முன்பு உட்காரவைத்து வழிபட்டனர். 

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. வருகிற 3-ந் தேதி நற்கருணை பவனியும், 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது.



கொடியேற்றும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட்ஜான், கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர்  பானோத் ம்ருகேந்தர் லால், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். 

விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory