» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்எல்ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

சனி 16, ஆகஸ்ட் 2025 5:38:53 PM (IST)



சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது மகன், மகள் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் பெரியசாமியின் அறையில் சோதனை செய்தபோது அங்கு சாவி ஒன்று கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தலைமைச் செயலகத்தில் ஐ.பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்குள் வருவோர் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்தவொரு அனுமதியுமின்றி உள்ளே நுழைந்தனர். பின்னர் ஐ. பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாரின் அறையை திறந்துவிடக் கோரி பேரவை உறுப்பினரின் செயலாளர் சீனிவாசனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதை அடுத்து சாவியை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சட்டப்பேரவை உறுப்பினரின் செயலாளர் சீனிவாசன் திருவல்லிக்கேணி காவல்துறையில் சட்டப்பேரவை உறுப்பினரின் வளாகத்திற்குள் உள்ளே அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபர்கள் நான்கு பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேரும் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையின் போது சீனிவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய 5 சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் அறையை சோதனை செய்யும் முன்பாகவே ஆதாரத்துக்காக விடியோ காட்சிகளும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory