» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் 14596பேர் குரூப் 2 முதல்நிலை தேர்வு எழுதினர்
சனி 14, செப்டம்பர் 2024 4:38:53 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 2 முதல்நிலை தேர்வினை 14596பேர் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2 (தொகுதி 2 & தொகுதி 2A) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்கார்த்திகேயன் ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் தேர்வு நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2 (தொகுதி 2 & தொகுதி 2A) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், மற்றும் சேரன்மகாதேவி ஆகிய நான்கு வட்டங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
மேற்படி தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வினை சுமூகமாக நடத்திட ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு துணை ஆட்சியர் வீதம் நான்கு வட்டங்களுக்கு 4 துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பறக்கும் படைகளும், தேர்வுக்குரிய பணிகளை மேற்கொள்ள 4 வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 17 இயக்கக்குழு அலுவலர்களும், 73 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்வின் நடவடிக்கைகளை பதிவு செய்திடும் பொருட்டு 78 வீடியோ கிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2 (தொகுதி 2 & தொகுதி 2A) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நான்கு வட்டங்களில் அமைந்துள்ள 73 தேர்வு மையங்களில் 20,223 தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 14596 தேர்வர்கள் இன்று தேர்வு எழுதினார்கள்.
மேற்படி தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையத்திற்கு வருவதற்கும், தேர்வு முடிந்த பின் செல்வதற்கும் போதிய பேருந்து வசதிகளும், காவல்துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். ஆய்வில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) தே.ஜெபி கிரேசியா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.